யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவராக புகழ்பெற்ற இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதான அஜந்தன் சுப்ரமணியம் என்ற பெயரில் அறியப்பட்ட பிரசன்ன நல்லலிங்கம் என்பவர் 2022 ஆம் ஆண்டு பிரான்ஸில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வருகிறார். மேலும், இவர் இலங்கையில் பல கொலைகளில் தொடர்புடையவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபர் தேடி வரப்பட்ட வேளையில், இலங்கையின் பாதுகாப்புப் படையினரால் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையிலிருந்து தப்பிச் சென்று அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைக் கடந்த பின்னர், கனடாவுக்கு வந்த போது இவர் கைது செய்யப்பட்டார்.
கனேடிய பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட இவர், மேலதிக விசாரணைகளுக்காக பிரான்ஸ் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.