பிரான்சில் Harki பற்றித் தெரிந்த ஒருவன் கனவில் கூட சொந்த இனத்திற்குத் துரோகம் இழைக்க மாட்டான். சும்மா அள்ளு விடும் வரலாறு அது. ஈரல் குலை நடுங்கும். ஈழ தமிழர்களும் சரி,பிரான்ஸ் தமிழர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை!
யார் இந்த கார்கிகள்?
அல்ஜீரியாவை ஆக்கிரமித்திருந்த பிரெஞ்சு அரசுக்கு எதிராக அல்ஜீரிய தேசம் போர்க்கோலம் பூண்டிருந்த காலம் அது. சுதந்திரம் இல்லையேல் வீரமரணம் என்பதே அப்போதைய ஒவ்வொரு அல்ஜீரியக் குடிமகனதும் உச்சரிப்பாக இருந்தது.
எமக்குள் சிங்களம் ஆட்களை விலைக்கு வேண்டிய வரலாறு போல் பிரெஞ்சு அரசும் அல்ஜீரியர்களில் ஒரு தொகுதியினரைப் பிரித்து எடுத்து ஆயுதங்கள் கொடுத்து ஒட்டுக் குழுக்களாக மாற்றி சொந்த மக்கள் மீதே திருப்பி விட்டார்கள்.
அல்ஜீரியப் போராளிகளுக்கும் மக்களுக்கும் அதிர்ச்சி – இதனால் பெரும் பின்னடைவு.அல்ஜீரிய மக்களும், போராளிகளும் கார்கிகளை – இயக்கம் (அரபு மொழியில் இயக்கம் என்றே அர்த்தம்) வேண்டாம் வெளியேறுங்கள் என்று ஓயாது கத்திக் கூப்பாடு போட்டார்கள் (தற்போது நாம் ஜேவிபியை ஆதரிக்க வேண்டாம் என்று ஒப்பாரி வைப்பது போன்று)
ஆனால் கார்கிகள் கேட்டபாடில்லை. சொந்த மக்களையே பிரெஞ்சு படைகளுடன் சேர்ந்து கொத்துக் கொத்தாகக் கொன்றொழித்தார்கள்.கார்கிகளைக் கொண்டே நிர்வாகக் கட்டமைப்பையும் உருவாக்கியது பிரெஞ்சு அரசு. அல்ஜீரிய விடுதலை பெரும் தேக்கத்தைச் சந்தித்தது.
ஆனால் வரலாறு ஒரு போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை – அது நேர்கோட்டில் பயணிப்பதும் இல்லை.1962 இல் பிரான்ஸ் அல்ஜீரியாவை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவானது. 1962 யூலை ஐந்தாம் திகதி சுதந்திர தேசமாகியது அல்ஜீரியா.
பிரான்ஸ் அரசுடன் ஆயிரத்தெட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட அல்ஜீரியா கார்கிகள் விடயத்தில் மட்டும் எந்த விட்டுக்கொடுப்புமில்லாமல் கறாராக நின்றது.பிரான்ஸ் அரசும் கார்கிகளைக் கைவிட்டு வாயை மூடிக் கொண்டது.
ஒப்பந்தப்படி ஒரு பக்கம் பிரெஞ்சுப் படைகள் வெளியேறிக் கொண்டிருக்க மறுபக்கம் போராளிகளும் அல்ஜீரிய மக்களும் கார்க்கிகளைத் தேடித் தேடி வேட்டையாடினார்கள். பெண்கள், குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் குடும்பம் குடும்பமாகக் கார்கிகளைக் கொன்று குவித்து வீதி முழுவதும் பிணக்காடாகியது.
தமது விடுதலையைத் தாமதப்படுத்தி தமக்குத் துரோகம் இழைத்த கார்கிகளை மன்னிக்க அல்ஜீரிய தேசம் தயாராக இல்லை.தம்மைக் காப்பாற்றுமாறு வெளியேறிக் கொண்டிருந்த பிரெஞ்சு படைகளின் கால்களில் விழுந்து கதறினார்கள் கார்கிகள்.
வெளியேறும் லொறிகளின், விமானங்களின், கப்பல்களின் பின்னால் கார்கிகள் ஏற முயன்ற போது பிரெஞ்சுப் படைகள் அவர்களை அடித்தும் சுட்டும் விரட்டினார்கள். ஏனென்றால் பிரான்ஸ் அரசு ஒரு கார்கியைக் கூட பிரெஞ்சுப் படைகள் பிரான்சுக்கு அழைத்து வரக் கூடாதென்று கடுமையாக உத்தரவிட்டிருந்தது.
கார்கிகள் கனவில் கூடத் தமக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.பிரெஞ்சுப் படைகள் கண் முன்னேயே கார்கிகள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட இது ஒரு கட்டத்தில் பிரான்ஸ் அரசுக்கு நெருக்கடியாக மாறியது.
வேண்டா வெறுப்பாக கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சிய கார்கிகளை பிரான்ஸ் தனது நாட்டுக்குக் கொண்டு வந்தது.இதற்கு பிறகு நடந்துதான் பெரும் கொடுமை. கார்க்கிகள் எந்த வசதியுமின்றி காடுகளுக்குள்ளும், நிலக்கரி சுரங்கங்களுக்குள்ளும் தனித்து விடப்பட்டார்கள்.
எந்த வதிவிடப் பத்திரமும் கிடையாது. பணி செய்ய அனுமதியில்லை. கிட்டத்தட்ட திறந்தவெளிச் சிறைச்சாலை. அல்ஜீரிய மக்களுக்கு நிகராக பிரான்ஸ் அரசும் பிரெஞ்சு மக்களும் கார்கிகளை வெறுத்தார்கள். துரோகத்தின் பரிசை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்தார்கள் கார்கிகள்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள். இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கணம் வரை அவர்கள் நாடற்றவர்கள்தான். இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இவர்களுக்கு வதிவிட உரிமை கொடுக்க வேண்டும் என்றும் தாம் கார்கிகளைக் கைவிட்டது தவறு என்றும் அதிபர் மக்ரோன் அறிவித்தார். கிட்டத்தட்ட அறுபத்தைந்து வருடங்களாக ஒரு குழுமம் அனாதையாக இந்த பூமிப் பந்தில் வாழ்கிறது என்றால் அது கார்கிகள் தான். அல்ஜீரியாவிற்குள் இவர்கள் கால் வைக்கவே முடியாது. ஆனால் போரிட்ட அல்ஜீரியர்களும் , பிரான்ஸ்காரர்களும் இரு நாடுகளிலும் குடியேறி குடியுரிமை பெற்று நன்றாக வாழ்கிறார்கள். ஆனால் கார்கிகள்?
துரோகம் எவ்வளவு கொடுமையானது என்பதற்கு வாழும் உதாரணம் கார்கிகள்.