பிரான்ஸில் குழந்தைகள் இறப்பு விகிதம் கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வருவது பற்றிய கவலைக்கிடமான தரவுகள் தற்போது வெளியாகியுள்ளன. 2024 ஆம் ஆண்டில் மட்டும், ஒரு வயதுக்குட்பட்ட 2,700 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்று பிரான்ஸின் தேசிய புள்ளிவிவர நிறுவனம் INSEE (Institut National de la Statistique et des Études Économiques) தெரிவித்துள்ளது.
இந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில், ஒவ்வொரு 1,000 குழந்தை பிறப்புக்கும் 3.5 குழந்தைகள் பிறந்த பிறகு உயிரிழக்கின்றனர். இது ஐரோப்பிய நாடுகளின் சராசரியைவிட மிகவும் அதிகமாகும். ஐரோப்பிய யூனியனில் பல நாடுகளில் 1,000 குழந்தைகளுக்கு 2க்கும் குறைவாகவே குழந்தை இறப்பு விகிதம் காணப்படுகிறது. ஆனால் பிரான்ஸ் மட்டும், வளர்ந்த நாடாக இருந்தாலுமே, இவ்வளவு மோசமான குழந்தை இறப்பு விகிதத்தை வைத்திருப்பது என்பது நாட்டு மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸில் குழந்தை இறப்பு விகிதம் அதிகமாகக் காணப்பட காரணங்கள் என்ன?
குழந்தைகளின் உயிரிழப்பிற்கு பல்வேறு காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன:
👉பிறப்பில் ஏற்படும் சிக்கல்கள் (complications at birth)
👉மரபணு குறைபாடுகள்
👉முந்தைய ஆண்டுகளில் அதாவது 2019 தொடக்கம் 2024 வரையிலான காலப்பகுதிகளில் மருத்துவ வசதிகள் பற்றாக்குறையாகக் காணப்பட்டமை.
👉சமூக மற்றும் பொருளாதார பின்னணிகள்.
இவை அனைத்தும் சேர்ந்து குழந்தை உயிரிழப்பை அதிகரிக்கச் செய்துள்ளதாக மருத்துவர் சமுதாயம் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி ஆண் குழந்தைகளே அதிகளவில் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது குழந்தை பிறக்கும் நேரத்தில் ஆண் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் நலச்சிக்கல்களின் சாத்தியம் உயர்வாக இருப்பதன் விளைவாக இருக்கலாம்.
ஒவ்வொரு 250 குழந்தைகளிலும் ஒரு குழந்தை தனது முதலாவது பிறந்த நாளை கடக்கும் முன்னரே உயிரிழக்கிறது, என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இது ஒரு நாட்டின் சுகாதார துறையின் நிலை பற்றிய கேள்விகளை எழுப்புகிறது.
இந்தக் குழந்தை இறப்பு விகிதம் 2011 முதல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதற்கான தீர்வாக, பிரான்ஸ் அரசு தற்போது நவீன சுகாதார நடவடிக்கைகளை திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் இனி பிறக்கும் குழந்தைகளுக்கான மருத்துவ பராமரிப்பு தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கின்றன.