யாழ்ப்பாணம் – வல்லை வெளிப்பகுதியில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலி அபகரித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதன்கிழமை (05) காலை, வல்லை வெளிப்பகுதியில் பயணித்த பெண்ணொருவரின் தங்க நகையை, உயர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்து தப்பிச் சென்றுள்ளனர்.
காங்கேசன்துறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயல்படும் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில், சாவகச்சேரிப் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், மோட்டார் சைக்கிளும், நகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இன்னொரு சந்தேக நபரை கைது செய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் கைதான நபரை இன்று வியாழக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நெல்லியடி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.