Read More

மீண்டும் வட-கிழக்கில் கனமழை!

27.12.2024 வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி

இந்தோனேஷியாவின் பண்டா அச்சே தீவுகளுக்கு மேற்காக காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது அடுத்த சில நாட்களில் மேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது எதிர்வரும் 30.12.2024 அன்று இலங்கையின் தென் கிழக்கு பகுதியை அண்மித்து இலங்கையின் கீழாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

தற்போது இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுகளுக்கு கீழே தெற்கு இந்து சமுத்திரத்தில் ஒரு புயலும் ஒரு தாழமுக்கமும் அருகருகாக ஒரே அகலக் கோடுகளில் நிலவுவதால் மேலே குறிப்பிட்ட காற்றுச் சுழற்சி தீவிரமாக வலுவடையாது. ஆகவே இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் எந்த ஒரு பகுதிக்கும் எத்தகைய பாதிப்பும் ஏற்படாது( தற்போதைய நிலையில்).

ஆனால் இதன் காரணமாக இன்று முதல்(27.12.2024) எதிர்வரும் 02.01.2025 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை 29.12.2024 முதல் இலங்கையின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் குறிப்பாக கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது. வடக்கு கடற்பகுதிகளும் மேற்குறிப்பிட்ட நாட்களில் சற்று கொந்தளிப்பான நிலையில் காணப்படும். ஆகவே மேற்கூறிய நாட்களில் வடக்கு மீனவர்களும் அவதானமாக இருப்பது அவசியம்.

-நாகமுத்து பிரதீபராஜா-