டொராண்டோ காவல்துறை, சிறுபான்மை சமூகத்தை குறிவைத்து நடக்கும் திருட்டுகள் குறித்து பொது பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்து, பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த எச்சரிக்கையின்படி, 2024 அக்டோபர் முதல் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சந்தேக நபர்கள், வாகன நிறுத்துமிடங்கள், வணிக வளாகங்கள் அல்லது கடைகளில் பாதிக்கப்படக்கூடியவர்களை அணுகி, வாழ்த்து சொல்வது, அருகிலுள்ள கோவில்,மசூதி எங்கு உள்ளது என்று கேட்பது, அல்லது பணம் அல்லது உதவி கேட்பது போன்று உரையாடலை தொடங்குகின்றனர்.
பின்னர், சந்தேக நபர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவரின் பைகள், பாக்கெட்டுகள் அல்லது உடலில் இருந்து நேரடியாக பொருட்களை திருடுகிறார்.
மற்ற சில சமயங்களில், காவல்துறையின்படி, சந்தேக நபர்கள் நான்கு பேர் கொண்ட குழுவாக வாகனத்தில் பயணித்து, பாதிக்கப்பட்டவர்களிடம் நகைகளை விற்பதாகக் கூறி அணுகுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் அருகில் வரும்போது, சந்தேக நபர்கள் அவர்களின் நகைகளை அகற்றி, அதற்கு பதிலாக மலிவான போலி நகைகளை வைக்கின்றனர். சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிய பிறகுதான் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பொருட்கள் மாற்றப்பட்டதை உணர்கின்றனர்.
இத்தகைய குற்றங்களைத் தடுக்க காவல்துறை பின்வரும் அறிவுரைகளை வழங்குகிறது:
- நகைகளை ஆடைகளுக்குள் மறைத்து வைக்கவும் அல்லது எளிதில் அகற்ற முடியாதவாறு பாதுகாக்கவும்.
- தனிப்பட்ட இடத்தை மதிக்காத அல்லது உங்களைத் தொட முயற்சிக்கும் அந்நியர்களை எச்சரிக்கையாக கவனிக்கவும்.
- அந்நியர்கள் உங்களுக்கு மிக அருகில் வர அனுமதிக்காதீர்கள் — அவர்கள் உங்களுக்கு நகை அணிவிக்கும் அளவுக்கு நெருக்கமாக இருந்தால், அது ஆபத்தானது.
- உங்கள் சுற்றுப்புறத்தை எப்போதும் கவனமாக இருங்கள்; சந்தேகத்திற்குரிய அல்லது குற்றச் செயல்களை காவல்துறை அல்லது குற்றவியல் தடுப்பு அமைப்புக்கு உடனடியாக தெரிவிக்கவும்.
- ஒரு சம்பவத்தை காவல்துறையிடம் புகாரளிக்கும்போது, சந்தேக நபரின் வயது, இனம், பேச்சு உச்சரிப்பு, பாலினம், உயரம், எடை, உடல் அமைப்பு, பச்சை குத்தல்கள் உள்ளிட்ட அடையாள அம்சங்கள், அவர்கள் பயன்படுத்திய வாகனத்தின் வகை அல்லது உரிமத் தகடு, மற்றும் அவர்கள் உங்களிடம் என்ன பேசினார்கள் என்பவற்றை நினைவில் வைத்து தெரிவிக்க முயற்சிக்கவும்.
இதுபோன்ற குற்றங்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.