ஏப்ரல் 12, சனிக்கிழமை இரவு, பா-து-கலே (Pas-de-Calais) கடற்பகுதி வழியாக பிரித்தானியாவை நோக்கி பயணித்த 50 அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு சிறிய படகு, நடுக்கடலில் பழுதடைந்த நிலையில் சிக்கியது. கடலில் தத்தளித்த இந்த அகதிகள், அச்சத்துடன் கடற்படையின் உதவிக்கு அழைப்பு விடுத்தனர்.
தகவல் பெறப்பட்டவுடன், Centre Régional Opérationnel de Surveillance et de Sauvetage (CROSS) என்ற பிராந்திய மீட்பு மற்றும் கண்காணிப்பு மையம் உடனடியாக மீட்புப்பணிகளில் ஈடுபட்டது. அதன்படி, அகதிகள் அனைவரும் உயிருடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவம், கடந்த சில வாரங்களில் Pas-de-Calais வழியாக மேற்கொள்ளப்படும் அகதிகளின் கடற்பயணங்களில் ஒரு முக்கிய சம்பவமாகும். அதிகாரிகள் தெரிவித்ததாவது, ஏப்ரல் மாதத்தின் தொடக்க நாட்களிலேயே ஆயிரத்துக்கு மேற்பட்ட அகதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதங்களைவிட, இந்த மாதத்தில் கடல்வழி பயணிக்கும் அகதிகளின் முயற்சிகள் கணிசமாக அதிகரித்துள்ளன என்பது கவலையளிக்கும் விடயமாகும்.
இத்தகைய பயணங்கள் பெரும்பாலும் மனிதகடத்தல் குழுக்களால் ஏற்பாடு செய்வதாலும், பழைய மற்றும் பாதுகாப்பற்ற படகுகளை பயன்படுத்துவதாலும் ஆபத்தானதாகும். இது போன்ற நடவடிக்கைகள் மீது ஐரோப்பிய நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அகதிகள் பெரும்பாலும் தங்கள் சொந்த நாடுகளில் நிகழும் உள்நாட்டு கலகம், பொருளாதார சிக்கல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களால் வெளியேறி, ஒரு புதிய வாழ்க்கையை தேடி பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு செல்ல முயல்கின்றனர்.