மரீன் லு பென்னுக்கு ஆதரவாக பிரான்சின் பல பகுதிகளில் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது உண்மையிலேயே ஒரு தேர்தல் பரப்புரைக் களத்தை நினைவூட்டும் வகையில் காணப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல், பொதுமக்கள் திரண்ட இடங்களில் நேரடி விளக்கங்கள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அண்மையில் மரீன் லு பென்னுக்கு ஐந்து ஆண்டு அரசியல் தகுதி நீக்க தண்டனை விதிக்கப்பட்டது, இதில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையாகும். இதனால், 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட முடியாது என்பதற்கான சாத்தியம் அதிகரித்துள்ள நிலையில், அவரது கட்சியினரால் பரப்புரைகள் நடத்தப்படுகின்றன.
பாரிஸில், மரீன் லு பென்னுக்கு ஆதரவாகவும், அவருக்கெதிராகவும் கூட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக République மையச் சந்திப்பு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் ஒன்றுகூடியது, இதில் அவரது அரசியல் தடை குறித்து வாதங்கள் முன்வைக்கப்பட்டன. சில இடங்களில் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவும், ஜனநாயக உரிமையை ஆதரித்தும் மௌன பேரணிகள் நடத்தப்பட்டன.
Haute-Garonne, Nord, Gironde, Rhône உள்ளிட்ட மாகாணங்களில் பரப்புரை நிகழ்ச்சிகள் பரவலாக நடைபெற்று வருகின்றன. மெட்ரோ நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், பொதுமக்கள் கூடும் சந்தை பகுதிகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் மரீன் லு பென்னுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. இந்த அரசியல் பரபரப்பான சூழ்நிலையில், பிரான்சு முழுவதும் ஒரு தேர்தல் சூழ்நிலை உருவாகி இருப்பதாகவே அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.