நீளிரா – போர் எதிர்ப்புப் படம்
~
தனிப்பட்ட பகை எதுவுமில்லாத மனிதர்கள், ஒருவரையொருவர் ஈவிரக்கமின்றி கொலை செய்யப் பயிற்றுவிக்கப்படுவதுதான் போரின் அபத்தமான அம்சம். உலகம் போரின் அபத்த விளைவுகளை அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தச் சூழலில்தான் இன்று நீளிரா பார்த்தேன்.
இன்று நடைபெறுவது அதிகாரத்துக்கான, ஒரு நாட்டின் கனிமவளங்களுக்கான போர்.
ஆனால் இலங்கையில் நடைபெற்ற யுத்தம் ஓர் இனத்தின் விடுதலைக்கானது.
நீள் + இரவு என்பதுதான் நீளிரா.
1987 இலங்கையில் அமைதியை நிலைநாட்டும் விதமாக இந்நிய அமைதிப்படை அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ் விடுதலை இயக்கங்கள் திறந்த மனதுடன் இந்திய அமைதிப்படையை வரவேற்றன. ஆனால் இந்திய அமைதிப்படையோ தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் அப்பாவித் தமிழர்களுக்கும் சொல்லொணா கொடுமைகளைத் தந்தது.
அமைதிப்படை வெளியேற வேண்டுமென இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் மக்கள் போராடினர். உண்ணாநோன்பு மேற்கொண்டு உயிர் துறந்த திலீபனின் கோரிக்கைகளுள் ஒன்று அமைதிப்படை வெளியேற வேண்டுமென்பது.
சரி, இப்போது நீளிரா
கதையைப் பார்ப்போம்.
யாழ்ப்பாணத்தில் ஓர் எளிய தமிழ்க் குடும்பம். அந்த வீட்டு பெண்ணுக்கு விடிந்தால் கல்யாணம். மாப்பிள்ளை ஃப்ரான்ஸில் இருக்கிறார். மணப்பெண்ணை மட்டும் வைத்துத் திருமணச் சடங்கு செய்து
அவளை வழியனுப்ப வேண்டும்.
அன்றிரவு, விடுதலைப் போராளிகளைத் தாக்க அமைதிப்படைத் திட்டமிடுகிறது. அதில் ஒரு படையணி தவறுதலாக திருமண வீட்டுக்கு
அருகே வந்துவிடுகிறது. விடியும்வரை அந்தக்குழுவினர் கல்யாண வீட்டில் தங்கியிருக்கத் திட்டமிடுகின்றனர்.
இது தெரிந்து போராளிக்குழுவினர் அவர்களைத் தாக்க முனைகின்றனர்.
அந்த இரவில் என்ன நடந்தது?
மறுநாள் காலை அந்தப் பெண்ணுக்கு திருமணம் நடந்ததா? இதுதான் நீளிரா.
இச்சூழலில் அந்த அப்பாவித் தமிழ்க் குடும்பத்தினர் அனுபவிக்கிற வலிகளையும் வேதனைகளையும் மனதைப் பிசையும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஒரு இனத்தின் மீது போர் உருவாக்கிய பதற்றத்தை, அச்சத்தை, நிரந்தரமின்மையை, மனக்குலைவை, ஒவ்வொரு காட்சிவழியாகவும் வெளிப்படுத்துகிறார் இயக்குநர் சோமீதரன். ஒரு போரால் மானுடத்தின் அமைதி எவ்வாறெல்லாம் சிதைக்கப்படுகிறது? மனம் நடுங்கும் வகையில் காட்டுகிறார்கள்.
இத்தனைக்கும் இடையில், அங்கு சிறுவர்கள் போரை எளிதாக எடுத்துக்கொண்டு பகடி செய்கிறாராகள். போரின் வெப்பம் பரவும் ஒரு நிலத்தை காதலின் ஈரமும் நனைக்கிறது. தன் கணவன் எங்கே? தெரியவில்லை. மகளுக்காவது
ஒரு நல் வாழ்க்கை அமையட்டும்.
என எதிர்காலம் மீது தாய்மார்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்.
நாம் யாருக்காக போராடுகிறோம்? யாரை எதிர்த்து போராடுகிறோம்? அமெரிக்க ராணுவ வீரர்களைப் போன்றதுதான் இந்திய ராணுவத்தின் நிலையும். அர்த்தமற்ற வன்முறை, தர்க்கத்தின் முறிவு, அன்றாட வாழ்வை உச்சகட்ட அழிவில் நிறுத்துவது, இவற்றை உள்ளடக்கியதுதான் போர். அதிகாரத்துவத்தின் கொடுங்கனவுகளே போரைக் கட்டமைக்கின்றன.
இந்தக் குடும்பத்தில் ஒருவர் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் வேலை செய்தவர். அப்போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே எல்லைகள் கிடையாது. எல்லைக் கோடுகளை போர்கள் அழிக்கின்றன. அல்லது புதிதாக உருவாக்குகின்றன.
போரில்,ஈடுபடுவது பகைவர்கள் மட்டுமில்லை. சகோதரர்களும்தான். இந்தியா, சகோதரர்களோடு சண்டை செய்யும் அபத்தத்தைத் செய்தது. பெரிய அளவில் தமிழ் ஈழம் , இந்திய அமைதிப்படையின் வன்முறை, என்றெல்லாம் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்த்து, ஒரு திரைப்படத்துக்குத் தேவையானவற்றை மட்டும் காட்டியிருக்கிறார் இயக்குனர். அதேவேளை நீளிரா ஓர் போர் எதிர்ப்புப் படமாக முழுமையடைந்த ஒரு கலை முயற்சியாக வெற்றி பெறுகிறது .
– கரிகாலன்
