Friday, March 20, 2026
No menu items!

பாரிஸில் பயங்கர துப்பாக்கி சூடு! மூவர் பலி!

தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் அதிகம் வசிக்கின்ற பாரிஸின் புறநகரப் பகுதியாகிய செவ்ரோனில் (Sevran-Seine-Saint-Denis) கடந்த

48 மணிநேர இடைவெளியில் அடுத்தடுத்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் மூவர் உயிரிழந்துள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர்.

போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் என்று நம்பப்படுகின்ற இந்தச் சம்பவங்கள் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

தாக்குதல்களில் ஒன்றில் ஏகே 47 ரக இயந்திரத் துப்பாக்கிகள் பயன்படுத்தப் பட்டுள்ளன என்று பொலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செவ்ரோன் நகரம் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் சில நடைபெறவுள்ள Seine-Saint-Denis நிர்வாக மாவட்டத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நகரின் Cité Basse, Allée des Percé-Neige பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணியளவில் 33-34 வயதுகளையுடைய இரண்டு ஆண்கள் தெருவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நபர் ஒருவர் கைத் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த இருவரும் அவசர மருத்துவ சேவையினர் அங்கு வந்து சேர்வதற்கு முன்பாகவே உயிரிழந்து விட்டனர் என்று கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக எவரும் கைதுசெய்யப்படவில்லை.

இதே நகரில் நேற்று சனிக்கிழமை விடிகாலைவேளை Beaudottes என்ற இடத்தில் ஏகே துப்பாக்கியால் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். ஆறு பேர் வரை

காயமடைந்தனர். அவர்களில் மூவர் ஆபத்தான கட்டத்தில் மீட்கப்பட்டுப் பாரிஸ் நகரில் உள்ள வெவ்வேறு மூன்று மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

போதைப் பொருள் கடத்தல் கும்பல்களிடையே எழுந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான பிணக்குகளே இந்தச் சம்பவத்தின் பின்னணி என்று பொலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தை அடுத்து செவ்ரோன் நகரம் எங்கும் பொலீஸ் காவல் அதிகரிக்கப்பட்டிருந்தத சமயத்திலேயே இன்று மாலை இரண்டாவது சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்றைய சம்பவத்தை அடுத்துப் பெரும் எண்ணிக்கையான பொலீஸார் அந்தப் பிரதேசத்தைச் சுற்றிவளைத்து மூடியுள்ளனர். இன்றிரவு எட்டு மணி முதல் நகரில் பொலீஸ் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.

👆 பார்க்க அழுத்துங்கள்

More News
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here