Sunday, March 22, 2026
No menu items!

யாழில் இன்று அதிகாலை பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு – ஹயஸ் வாகனத்தில் பயணித்தவர்கள் மீது சுட்ட பொலிஸ்

யாழ்ப்பாணம், பிப்ரவரி 10 – யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை வீதியில் அல்லைப்பிட்டி சந்தியில் அதிகாலை வேளையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 17 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் தகவலின்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை ஊர்காவற்துறை பகுதியில் உள்ள அல்லைப்பிட்டி சந்தியில் கடமையில் இருந்த பொலிஸார், சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த ஹயஸ் ரக வாகனம் ஒன்றை நிறுத்துமாறு சமிக்ஞை செய்தனர்.

ஆனால், வாகன சாரதி பொலிஸாரின் கட்டளையை மீறி வேகமாகத் தப்பிச் செல்ல முயன்றதால், பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

வாகனம் நிறுத்தப்பட்டபோது, உள்ளே இருந்த அல்பினோ அருள் பயாஸ் துப்பாக்கிக் குண்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டார். பொலிஸாரே அவரை உடனடியாக மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அதே வாகனத்தில் பயணித்த மேலும் இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், மற்றொருவர் நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை வேளையில் ஊர்காவற்துறை நோக்கி அவர்கள் ஏன் பயணித்தனர்? வாகனத்தில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் ஏதேனும் இருந்தனவா? அவர்களுக்கு முன்னர் குற்றப் பின்னணி உள்ளதா? என்பன உள்ளிட்ட விவரங்களை ஆராய்ந்து வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் மாவட்டத்தினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்கள் கிடைக்கப் பெற்றவுடன் புதுப்பிக்கப்படும்.

👆 பார்க்க அழுத்துங்கள்

More News
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here